
கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பக்கங்களுக்கு இடைவெளி விட்டிருந்த சந்தோஷத்தை அதிக நாட்களுக்கு நீடிக்க விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் மீண்டும் இந்தப் பக்கங்களில் நான். எதை எதையோ சொல்ல வந்து கட்டுரை கொஞ்சம் நீளமாகி விட்டது.
இனி மீண்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள் தொடருவேன் என்று பணிவுடன் எச்சரிக்கி்றேன்.
ராகவன் தம்பி
காங்கிரஸ் கட்சி கொஞ்சம் சௌகர்யமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய சந்தோஷத்தில் முழுதுமாகத் திளைக்க விடாமல் கிழக்குப் பகுதியில் இருந்து ஏதாவது ஒரு குடைச்சல் பாவம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. லால்கர் பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை இப்போது மேற்கு வங்காள அரசையும் மைய அரசையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. மாவோயிஸ்டுகள் அங்கே ஏக கரைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய கணக்கெடுப்பின் படி இந்த நாட்டின் 70 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் நக்ஸல் மற்றும் மாவோயிஸ்டு வைரஸ்கள் (பிரதமரின் பாஷையில்) தாக்கப் பட்டுள்ளன.
மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் அசுர வளர்ச்சிக்கு அங்குள்ள ஆளுங்கட்சியான சிபிஐ (எம்) கட்சியினர் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வன்முறை நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை நாம் இங்கே மறந்துவிட முடியாது. ஒரு காலத்தில் மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை அரசியல் வாதங்கள் அல்லது அரசியல் சார்ந்த எதிர்ப்பு என்பது அறிவார்ந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்த விவாதங்களாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது அங்கும் நம்முடைய ஊரைப்போலவே வாதங்களை எல்லாம் அடி உதை கவனித்துக் கொள்கிறது. தடி எடுத்தவன் தண்டல் காரன். பலத்தை நிரூபிக்கிறவன் அறிவாளி.
இதற்கு இடையில் மேற்கு வங்கமே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போது டெல்லியில் உட்கார்ந்து கொண்டு காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்டு கட்சியும் ஒருத்தர் மேல் ஒருத்தர் பழியை சுமத்திக் கொண்டு கல்யாண நலங்கில் விளையாடுவது போல தங்களுக்குள் பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் கட்சி சார்ந்த மார்க்சிஸ்டுகளும் இடதுசாரி சிந்தனை உள்ள ஊடகக்காரர்களும் இடதுசாரி சிந்தனை கொண்ட சமூக ஆர்வலர்களும் தத்துவார்த்த ரீதியாகக் குழம்பிப் போய் நிற்பது தெரிகிறது. அவர்கள் சிந்தனாரீதியாக உறைந்து போய் இருப்பது போலத் தெரிகிறது. மர்க்கிஸ்டுகளின் கோட்டைகளான கேரளாவிலு்ம் மேற்கு வங்கத்திலும் மர்க்சிஸ்டு கட்சியினர் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராகக் காட்டி வந்த வன்முறையைப் பல ஆண்டுகளாக அந்த மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் சகித்துப் பேராடி வந்தன. தத்துவம் தனி. நடைமுறை தனி இல்லையா?
அப்பத்தைப் பங்கு போட்டுக் கொடுத்த குரங்கின் கதையாக அந்த மாநிலத்தில் தற்போது நடந்து வரும் விஷயங்களைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் கட்சித் தலைமை. இது காங்கிரஸ் கட்சிக்குக் கொஞ்சம் சாதகமாக இருப்பது போலத் தோன்றினாலும் நாட்டின் நலனுக்கு மிகவும் கேடு விளைக்கும் செயல்பாடு இது என்பதை டெல்லியின் காங்கிரஸ் தலைமை உணரவேண்டும். அதற்கேற்றாற்போல மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் தாதாக்களுக்கு டெல்லியில் இருந்து அறிவுரைகள் அனுப்பப்படவேண்டும். மம்தா தீதியும் இதில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சிபிஎம் கட்சிக்கு நேருவதை நினைத்து இப்போதைக்கு இவர்கள் சந்தோஷப்பட்டால் இவர்களுக்கும் பெரிய அளவில் ஆப்பு செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்கிற விஷயத்தை இவர்கள் மறந்தவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு சிலநாட்கள் முன்பு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு எதிரான ஒரு கொலைவெறித் தாக்குதலை மாவோயிஸ்டுகள் திட்டமிட்டபோதே அங்குள்ள மார்க்சிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் இடையில் மிகப் பெரும் திரை விழுந்தாயிற்று என்கிறார்கள் மேற்கு வங்க அரசுக்கு எதிரான பல நாசகார வேலைகளை மிகவும் வெளிப்படையாக மாவோயிஸ்டுகள். மேற்கொள்ளத் துவங்கிப் பல காலமாயிற்று.
இந்தி மற்றும் ஆங்கில ஊடகச் செய்திகளில் நாம் அடிக்கடி காணக்கிடைக்கும் காட்சி என்னவென்றால் மாவோயிஸ்டுகள் லால்கர் பகுதி முழுதும் நன்றாக இருக்கும் சாலைகளை அங்கங்கு வெட்டி நாசப்படுத்தியும், செழிப்புடன் வளர்ந்தோங்கி நிற்கும் பசுமையான மரங்களை வெட்டி சாலைக்குக் குறுக்காகப் போட்டு சாலைகளை மறித்தும் (நம்ம ஊர் பாட்டாளிகளின் வீரவிளையாட்டுக்கள் ஞாபகத்துக்கு வருகிறது இல்லையா?) மக்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் சிபிஎம் கட்சித் தலைவர்களின் வீடுகளும் அலுவலகங்களும் தாக்கப்படுகின்றன. ஓரிருவர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர். லால்கர் பகுதியில சட்டமும் ஒழுங்கும் காணாமல் போய் பல நாட்களாகி விட்டன. அங்கே வேறு வகையான ஆட்சி நடந்து வருகிறது.
உங்களுக்கு ஞாபகம் இருக்குமா தெரியாது. சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒரு செய்தியைக் காட்டினார்கள். கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள கேஜூரி என்னும் ஊரின் மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர் ஒருவர். அவருடைய வீட்டைச் சூழ்ந்து கொண்ட மாவோயிஸ்டுகளும் பொதுமக்களும் போலீசை அங்கே வரவழைத்து அற்த ஆளுடைய வீட்டில் நுழைந்து அவருடைய ஊழல்களுக்கு சாட்சியாக அவர் வீட்டில் குவிந்து கிடக்கும் மைய அரசு மற்றும் மாநில அரசுத் திட்டங்கள் தொடர்பான கோப்புக்களையும் ஆவணங்களையும் கைப்பற்றுமாறு போலீசைக் கேட்டுக்கொண்டனர். போலீஸ் அந்த இடத்துக்கே வராமல் ரொம்ப நேரமாக அல்வா கொடுத்துக் கொண்டிருந்தது. நீ்ண்டநேரம் காத்துக் கிடந்த மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து உள்ளூர் மக்களும் அந்தத் தலைவரின் வீட்டுக்குள் நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி சில கோப்புக்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர். அவர்கள் கைப்பற்றிய ஆவணங்களில் மிகவும் முக்கியமானவை தேசிய ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்புத் திட்டம் தொடர்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கப்படும் வேலைக்கான அடையாள அட்டைகள். ( திலீப் குமார் மற்றும் மனோஜ்குமார் ரகத்து பழை இந்திப் இந்திப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்தக் காலத்து பல இந்திப் படங்களின் இறுதிக்காட்சிகளில் ஜீவன்லால் அல்லது ப்ரான் அல்லது அஜீத் வீடுகளில் மக்கள் கூட்டம் கதவை உடைத்து நுழைந்து எல்லா ஆவணங்களையும் கைப்பற்றிச் செல்லும். ஒரு சில தமிழ்ப்படங்களிலும் இவை போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன).
கோலாபாரி என்னும் இடத்தில் சிபிஐ (எம்) கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. எரியுண்டு சிதைந்தவற்றின் எச்சங்களாகப் பல அரசாங்க ஆவணங்கள் அந்தக் கட்டடத்தில் பின்னர் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றையும் ஊடகங்களில் சாங்கோபாங்கமாகக் காண்பித்தார்கள். இன்னும் ஒரு இடத்தில் (இவர்களுடைய ஊர்ப் பெயர்கள் அத்தனை சுலபமாகவா ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது?) உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான மாநில அரசு திட்டம் தொடர்பான கோப்புக்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தின் சில கிராமங்களில் நியாய விலைக்கடைகள் தாக்கப்பட்டன. காரணம் என்னவென்றால் பங்கீட்டு முறையில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட சில முறைகேடுகளும் அந்த முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் உள்ளூர் சிபிஎம் ஆட்களின் தொடர்புகளைக் கண்டுபிடித்து உள்ளூர் தினசரிகள் அம்பலப்படுத்தியதால் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளைப் பின்னிப் பெடல் எடுத்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின. கடந்த முப்பதாண்டுகளாக மேற்கு வங்காள மாநிலத்தில் சிபிஎம் ஆட்களின் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளுக்கு (அட, எதுக்கு சிரிக்கிறீர்கள்?) பயந்துதான் மக்கள் வாயைத் திறக்காமல் இருந்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இப்போது மாவோயிஸ்டுகள் தயவில் அந்தப் பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது என்றும் சொல்கிறார்கள். அதன் விளைவுதான் சின்னச் சின்ன இடங்களிலும் இவைபோன்ற தாக்குதல்கள் என்று தோன்றுகிறது.
இந்தப் பதிவைப் படிக்கும் கொல்கத்தா தோழர்கள் யாராவது இதுகுறித்து ஏதாவது எழுதினால் சௌகர்யமாக இருக்கும். கொல்கத்தா நகரத்தில், காளி பூஜை, நவராத்திரி பூஜை கொண்டாட்டங்களின் போது சிபிஎம் தோழர்கள் பணம் கேட்டு ஆடும் ருத்ரதாண்டவம் மிகவும் பயமாக இருக்கும் என்று தனிப்பட்ட முறையில் நண்பர்கள் டெல்லி வரும்போது சொல்வார்கள். மக்களிடம் பணம் பறிக்க விஞ்ஞான ரீதியான பல வழிமுறைகளை அங்குள்ள சிபிஎம் தோழர்கள் ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாகக் கண்டுபிடிப்பார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார்.
சரி. மீண்டும் விட்ட இடத்துக்கே வருகிறேன். மேற்கு வங்காளத்தில பல இடங்களில் பொதுமக்கள் திரண்டு போலீசை வரவழைத்து சிபிஎம் தலைவர்கள் வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற சோதனைகளில் அரசு திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள், ஊழலில் இந்தத் தலைவர்களி்ன் தலையீட்டுக்கான நிரூபணங்கள் மட்டுமல்லாது சில கிராமத்துத் தலைவர்களின் வீடுகளில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களும் நாட்டுத் துப்பாக்கிகளும் கைப்பற்றியதாகவும் செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆ்ஃப் இந்தியா போன்ற ஆங்கில தினசரிகளில் இவை போன்ற மேற்கு வங்காள மாநிலம் தொடர்பான செய்திகளை நீங்கள் பத்து பக்கங்களுக்குப் பிறகு குட்டி குட்டியான பத்திகளில் இது போன்ற செய்திகளை நிறையப் படிக்கலாம். எதிர்பாராதவிதமாகக் கண்ணில் படும் இப்படிப்பட்ட செய்திகளை நிறுத்திப் படித்துப் பார்த்தால் அடடா நம்ம தோழர்கள் ஊரிலா என்று ஒரு நிமிஷம் வருத்தப்பட்டு பிறகு ஆசிரியர் கடிதங்களைப் படிக்கப் போய்விடுவோம்.
சரி. மீண்டும் விஷயத்துக்கு வருகிறேன்.
மேற்கு வங்கத்தில் இயங்கும் மாவோயிஸ்டுகளுக்கும் அண்டை மாநிலங்களான ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், மற்றும் சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் இயங்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்று மாநிலங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ப்புற எல்லைகளில் இயங்கும் காவல்துறை சோதனைச் சாவடிகளில் தொடர்ச்சியாக திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்று மூன்று மாநிலங்களின் காவல்துறையும் குழம்பிக் கிடக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் இப்போது பெருமளவில் ஓங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் அந்த மாநிலத்தின் பல கிராமங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளில் நடத்தப் பெறும் சோதனைகளில் கிட்டும் ஆயுதங்களுக்கும் தொடர்பிருக்குமோ என்ற நோக்கிலும் பார்க்குமாறு ஆசியன் ஏஜ் போன்ற நாளேடுகள் அறிவுறுத்துகின்றன. சில காட்சி ஊடகங்களிலும் இதே போன்ற தொனியில் விவாதங்கள் சில நாட்கள் தொடர்ந்தன. நீங்களும் பார்த்து இருக்கலாம்.
பொதுவாக நேபாளம் கள்ளத்தனமான ஆயுதங்களின் சந்தை என்று பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் மாவோயிஸ்டு போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு அங்கிருந்துதான் ஆயுதங்கள் விலைக்குக் கிட்டுகின்றன என்றும் சொல்கிறார்கள். வெகு சமீபத்தில் நேபாளத்தில் இருந்து இயங்கும் பாகிஸ்தான் பயங்கரவாதக் கயவர்களுக்கு (இவர்களை என்ன மயித்துக்குத் தீவிரவாதிகள் என்று அழைக்க வேண்டும்?) கள்ளநோட்டுக்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சப்ளை செய்து கொண்டிருந்தததாகக் குற்றம் சாட்டி ஒருவனை டெல்லி போலீஸ் கைது செய்தது. இந்தக் கைது சம்பவமே இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நேபாளத்தைத் தங்கள் சந்தைத் தளமாக வைத்து இருப்பதற்கு சாட்சியமாக இருக்கிறது.
மேலே ஒரிடத்தில் ஒரிஸ்ஸா பற்றிச் சொன்னேன். அங்கே பிஜூ பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள் கட்சி அமோக வெற்றி பெற்றிருந்தாலும் அந்த மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் மற்றும் மாவோயி்ஸ்டுகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது என்கிற விஷயத்தையும் மறுக்க முடியாது. சொல்லப்போனால், நாட்டின் கிழக்குப் பகுதி முழுக்க, அதாவது மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, ஆந்திராவின் கிழக்குப் பகுதி, மகாராஷ்டிராவின் ஒரு பகுதி போன்றவற்றில் பலவகையான நக்ஸலைட் மற்றும் மாவோயிஸ்டுகள் கோஷ்டிகள் ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்தி வருவதையும் மறுக்க முடியாது.
மேற்கு வங்கத்தின் லால்கரில் தற்போது பீடுநடை போட்டு வரும் மனித உரிமைகளை மீறல்களைக் கண்டித்து ஒரு ஆத்மாவும் வாயைத் திறக்கவில்லை. பல இடங்களில் பலவற்றுக்காகக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்த தொண்டு நிறுவனங்களும் ஆழ்ந்த மௌனத்தைத்தான் கடைப்பிடித்து வருகின்றன.
தற்சமயம் மார்க்சிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகளால் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதும் வேற்றுமைகள் உண்டு என்று நாம் எடுத்துக் கொள்ள அதிகம் வாய்ப்பு இல்லை. இரு அமைப்புக்களுக்கும் வன்முறையின் மீது நம்பிக்கை உண்டு. இந்த இரு அமைப்புக்களும் வழிமுறைகளில்தான் வேறுபடுகின்ற மாதிரி இருக்கின்றனர். ஆனால் இவர்களின் இலக்கு ஒன்றே என்று ஒரு தோழர் என்னிடம் சொன்னார். மார்க்சிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் ஒருவர் மீது ஒருவர் கொலைத்தாக்குதலில் ஈடுபடலாம். ஒருவருக்கு எதிரான இன்னொருவரின் தாக்குதல் இவர்களுக்கு இடையில் உள்ள கோட்பாடு மற்றும் தத்துவ ரீதியான வேறுபாட்டுக்காக அது இருக்காது என்றும் வன்முறை மட்டுமே இவர்களின் சிந்தனாமுறையில் ஊறி இருப்பதால் இப்படித் தங்களுக்குள் கொன்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
இப்போதைக்கு மைய அரசு Commando Battalion for Resolute Action (COBRA) என்று அழைக்கப்படும் விசேஷப்படையை அமைத்து நக்ஸல்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் இயங்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்தக் கோப்ரா வீரர்கள், கோவை மற்றும் அஸ்ஸாமின் சில்சாரில உள்ள காட்டுப்பகுதிகளில் பணிபுரியப் போர்ப்பயிற்சிகள் அளிக்கும் பயிற்சி மையங்களில் விசேஷப் பயிற்சி பெற்றவர்கள். 19 வகைக்கும் மேற்பட்ட நவீனக்கருவிகளைக் கொண்டு எதிரிகளை சமாளிக்கும் போர்த்திறன் பயிற்சி பெற்ற வீரர்கள். இவர்கள் மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகள் பொதுமக்களைக் கேடயமாக வைத்துக் கைப்பற்றியிருக்கும் பல கிராமங்களை ஒவ்வொன்றாக விடுவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. மேற்கு வங்கம் தவிர, ஒரிஸ்ஸா, பீகார், மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
ராகவன் தம்பி
28 ஜூன் 2009
உங்கள் மேலான கருத்துக்களை raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
|